அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதலை அளித்துள்ளது.
நாடெங்கும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டுவரும் பொருட்டு 'பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதா' அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனாதிபதி பிரணாபிடம் இந்த மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மறைமுக வரிவிதிப்பு அளவு மற்றும் ஜி.எஸ்.டி-ஐ அமல் செய்வதில் உள்ள பிரச்சினைகளை களையும் பொருட்டு ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த கவுன்சில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பும் அரசு கெசட்டில் வெளியிடப்பட்டது.
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் பிராங் நொரோன்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த ஜி.எஸ்.டி கவுன்சிலில் மத்திய நிதி அமைச்சர், மத்திய வருவாய் துறை இணை அமைச்சர் மற்றும் மாநில நிதியமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். சுருக்கமாக கூறுவதானால் மாநில நிதியமைச்சர்களின் உயர்மட்டக் குழு இந்த கவுன்சிலுக்கு உதவி புரியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.